பா.ஜனதா உயர்மட்ட தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1,800 கோடி வழங்கியுள்ளார் -காங்கிரஸ் குற்றச்சாட்டு

பா.ஜனதா உயர்மட்ட தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1,800 கோடி வழங்கியுள்ளார் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
பா.ஜனதா உயர்மட்ட தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1,800 கோடி வழங்கியுள்ளார் -காங்கிரஸ் குற்றச்சாட்டு
Published on

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, எடியூரப்பா கர்நாடகாவின் முதல்வராக இருந்த காலக்கட்டங்களில் பா.ஜனதாவின் மத்திய தலைவர்களுக்கு ரூ.1,800 கோடி வழங்கினார் என குற்றம் சாட்டியுள்ளார். கேரவன் பத்திரிக்கை வெளியிட்ட செய்தியை குறிப்பிட்டு எடியூரப்பா, பா.ஜனதா கட்சியின் மத்திய குழுவிற்கும், நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் பணம் வழங்கியுள்ளார் என சுர்ஜேவாலா கூறியுள்ளார்.

தன்னை பாதுகாவலர் என அழைத்துக்கொள்ளும் பிரதமர் மோடி மற்றும் இவ்விவகாரத்தில் தொடர்பு உள்ள ஒவ்வொரு தனிநபரும் பதிலளிக்க வேண்டும். இத்தகவல்கள் அடங்கிய டைரி தொடர்பாக உண்மையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும். இதனை லோக்பால் முக்கியமாக கவனத்தில் எடுக்க வேண்டும். எடியூரப்பா 2009 காலகட்டங்களில் வழங்கிய தொகையென்றும், டைரியின் ஒவ்வொரு பக்கத்திலும் எடியூரப்பா கையெழுத்திட்டு ஆவணப்படுத்தியுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங், கட்காரி, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு எடியூரப்பா பணம் அளித்துள்ளார் என செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுர்ஜேவாலா பேசுகையில், இது உண்மையோ அல்லது பொய்யோ? எடியூரப்பாவின் கையெழுத்து அடங்கிய இந்த டைரி 2017-ம் ஆண்டிலிருந்து வருமான வரித்துறையிடம் உள்ளது. அப்படியானால், பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா ஏன் அதை விசாரிக்கவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com