

திருவனந்தபுரம்,
140 தொகுதிகளை கொண்ட கேரள சட்டசபைக்கு ஏப்ரல் 6-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
கேரளாவில் இடதுசாரிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், வரும் சட்டசபை தேர்தலில் அம்மாநிலத்தில் இடதுசாரிகள் கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி, பாஜக கூட்டணிகளுக்கு இடையே மும்முனை ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலில் இடதுசாரிகள் தலைமையிலான கூட்டணியே
மீண்டும் வெற்றிபெற்றும் என கருத்துக்கண்ப்புகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், கேரள முதல்மந்திரியும், இடதுசாரிகள் கூட்டணியை சேர்ந்தவருமான பினராயி விஜயன் இன்று தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அதில், பினராயி விஜயன் கூறியதாவது,
தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் இடதுசாரிகளின் இடது ஜனநாயக முன்னணியே மீண்டும் ஆட்சியமைக்கும் என தெரிவிக்கின்றன. கருத்துகணிப்புகளின் புள்ளிவிவரங்களிலேயே இடதுசாரி கட்சி தொண்டர்கள் இருக்கவேண்டாம் என நான் தெரிவித்துக்கொள்கிறேன். இது ஒரு அறிகுறிதான். தேர்தலில் இடதுசாரிகள் வெற்றியை உறுதி செய்ய அனைவரும் முறையாக வேலைசெய்ய வேண்டும்.
பெட்ரோல்,டீசல், சமையல் எரிவாயு விலை உயர்ந்துவருகிறது. எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்த காங்கிரஸ் அரசு அதிகாரம் வழங்கியது. அதை கண்டித்து பாஜக மாட்டுவண்டி போராட்டம் நடத்தியது. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்தபின்னரும் அதே நிலைதான் தொடருகிறது.
மக்கள் பிரச்சினைகள் குறித்து அவர்கள் இருவருக்கும் (பாஜக, காங்கிரஸ்) எந்த பொறுப்பும் இல்லை. காங்கிரசை சேர்ந்த சில முக்கிய தலைவர்கள் பாஜகவின் உதவியுடன் கேரள சட்டமன்றத்திற்குள் செல்ல முயற்சிக்கின்றனர். வாக்கு வியாபாரத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். வரும் நாட்களில் மேலும் சில தகவல்கள் வெளிவரும் என்றார்.