

புதுடெல்லி,
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதல்களில் முதல் நாளிலேயே ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி (வயது 86) கொல்லப்பட்டார். இது ஈரான் மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. மேலும் ஈரான் ராணுவ மந்திரி அசிஸ் நாசிர்சாடே, ராணுவ தளபதி அப்துல் ரகிம் மவுசவி, புரட்சிகர காவல்படை தளபதி முகமது பக்பூர், ராணுவ ஆலோசகர் அலி சம்கானி ஆகியோரும் உயிரிழந்தனர்.
இவர்கள் அனைவரும் ராணுவ கவுன்சில் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றிருந்தபோது, அந்த இடத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் பலியாகினர். காமேனியுடன் அவரது மகள், மருமகன், பேரன், மருமகள் ஆகியோரும் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முறையான போர் அறிவிப்பு இல்லாமல் நடத்தப்பட்ட ராணுவ தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அலி ஹொசைனி கமேனி குறிவைத்து படுகொலை செய்யப்பட்டதை இந்திய தேசிய காங்கிரஸ் (INC) சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறது. இந்த ஆழ்ந்த துயரமான தருணத்தில் உச்ச தலைவரின் குடும்பத்தினருக்கும், ஈரான் மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள ஷியா சமூகத்திற்கும் காங்கிரஸ் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த கடுமையான நெருக்கடியை அவர்கள் கடந்து செல்லும் போது நாங்கள் அவர்களுடன் ஒற்றுமையாக நிற்கிறோம். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, இந்திய அரசியலமைப்பின் 51வது பிரிவில் கட்டளையிடப்பட்டுள்ளபடி, பேச்சுவார்த்தை மற்றும் சர்வதேச சட்டத்தை மதிப்பதன் மூலம் சர்ச்சைகளை அமைதியான முறையில் தீர்ப்பதற்கான உறுதிப்பாட்டில் நங்கூரமிடப்பட்டுள்ளது.
பதவியில் இருக்கும் ஒரு நாட்டின் தலைவரை குறிவைத்து கொல்வது இந்த சர்வதேச விதிகளின் மையத்தில் தாக்குகிறது. இறையாண்மை நிபந்தனைக்குட்பட்டது அல்ல, மேலும் அரசியல் சட்டபூர்வமான தன்மையை பலத்தால் உருவாக்க முடியாது. ஒவ்வொரு நாட்டின் குடிமக்களும் தங்கள் சொந்த அரசியல் எதிர்காலத்தை தீர்மானிப்பது என்பது பிரிக்க முடியாத உரிமை என்பதை காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்துகிறது.
ஆட்சி மாற்றத்தை வடிவமைக்கவோ அல்லது மற்றொரு அரசின் தலைமையை ஆணையிடவோ எந்த வெளிப்புற சக்திக்கும் அதிகாரம் இல்லை. இத்தகைய நடவடிக்கைகள் ஏகாதிபத்தியத்திற்குச் சமம் மற்றும் உண்மையான விதிகள் சார்ந்த சர்வதேச ஒழுங்கிற்கு அடிப்படையில் பொருந்தாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.