கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி பேரணி

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனி ராஜாவை 3 லட்சத்து 64 ஆயிரத்து 422 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி பேரணி
Published on

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் எம்.பி.யான ராகுல் காந்தி நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவின் வயநாடு மற்றும் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த தேர்தலில், இரண்டு இடங்களிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

வயநாடு தொகுதியில் அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனி ராஜாவை 3 லட்சத்து 64 ஆயிரத்து 422 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். இதேபோன்று காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதியான ரேபரேலியில், பா.ஜ.க.வின் தினேஷ் பிரதாப் சிங்கை 3 லட்சத்து 89 ஆயிரத்து 341 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராகுல் காந்தி வெற்றி பெற்றுள்ளார்.

இந்த நிலையில் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு முதல் முறையாக ராகுல் காந்தி கேரளா வந்துள்ளார். கோழிக்கோடு விமான நிலையம் வந்த அவருக்கு கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து தேர்தலில் வெற்றி பெற வைத்த மக்களை சந்தித்து ராகுல் காந்தி நன்றி தெரிவித்து வருகிறார். வயநாடு தொகுதியின் ஒரு பகுதியான மலப்புரம் மாவட்டம் எடவண்ணாவில் ராகுல் காந்தி பேரணியாக சென்றார். அப்போது வழியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com