

கவுகாத்தி
126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்திற்கு, ஏப்ரல் 9-ந்தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும். இந்த சூழலில், அசாம் மாநில காங்கிரஸ் எம்.பி. பிரத்யுத் போர்டோலாய் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் தலைவர் கார்கேவை நேற்றிரவு சந்தித்து பதவி விலகல் கடிதமும் அளித்துள்ளார்.
அசாம் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஏற்பட்ட அதிருப்தியால் பதவி விலகிய அவர், அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் மாநில பா.ஜ.க. தலைவர் திலீப் சாய்கியா ஆகியோர் முன்னிலையில் அக்கட்சியில் இன்று இணைந்துள்ளார்.
அசாமின் நகாவன் தொகுதியில் 2 முறை காங்கிரஸ் எம்.பி.யாக பதவி வகித்துள்ள அவர் தருண் கோகாய் அரசில் மந்திரியாகவும் இருந்துள்ளார். அவரை வரவேற்ற பா.ஜ.க. தலைவர்கள், அவருடைய அனுபவம் மற்றும் செல்வாக்கு ஆகியவை கட்சி அமைப்பை வலுப்படுத்தும் என்று கூறினர்.