விசா முறைகேடு வழக்கு: இது ஒரு டெஸ்ட் மேட்ச்; இன்று 3வது நாள் மட்டுமே - சிபிஐ விசாரணை பற்றி கார்த்தி சிதம்பரம் கருத்து!

3வது நாளாக இன்றும், சிபிஐ தலைமையகத்தில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஆஜரானார்.
விசா முறைகேடு வழக்கு: இது ஒரு டெஸ்ட் மேட்ச்; இன்று 3வது நாள் மட்டுமே - சிபிஐ விசாரணை பற்றி கார்த்தி சிதம்பரம் கருத்து!
Published on

புதுடெல்லி,

சீன நாட்டைச் சேர்ந்த 263 பேருக்கு, 2011-ம் ஆண்டு முறைகேடாக விசா பெற்றுத் தந்ததாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், விசா முறைகேடு வழக்கு தொடர்பாக, கார்த்தி சிதம்பரம் சிபிஐ முன்பு விசாரணைக்காக ஆஜராகி வருகிறார். இதற்கிடையே, இது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், அரசுடன் இணைந்து விசாரணை அமைப்புகள் தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும் குறிவைத்து மவுனமாக்குவதற்காக கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும்,  தன்மீது புனையப்பட்டுள்ள இந்த வழக்கானது நாடாளுமன்ற உறுப்பினர் மீது அவையின் உரிமையை மீறிய ஒரு செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராக தன்னுடைய நடவடிக்கையில் சிபிஐ குறுக்கீடு செய்வது ஜனநாயக நடைமுறைகள் மீதான நேரடி தாக்குதல். எனவே, இந்த விவகாரத்தில் உடனடியாக முகாந்தரம் எடுத்துக்கொண்டு நாடாளுமன்ற உரிமை மீறல் தொடர்பான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை கார்த்தி சிதம்பரம் முன்வைத்துள்ளார்.

இந்த நிலையில், 3வது நாளாக இன்றும், சிபிஐ தலைமையகத்தில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அவர் கூறியதாவது, "டெஸ்ட் மேட்ச் 5 நாட்கள் நடக்கிறது. இது 3வது நாள் மட்டுமே. சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளேன், சபாநாயகரின் பதிலுக்காக காத்திருக்கிறேன்" என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com