

புதுடெல்லி
நாட்டின் அழிவுக்கான மனிதராக, அவநம்பிக்கை மனிதராக, ராகுல் காந்தி மாறி வருவதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாக சாடியுள்ளார்.
மக்களவையில் இன்று நடைபெற்ற பட்ஜெட் விவாதத்திற்கு பதிலளித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசு மீது, ராகுல் முன்வைத்த புகாரை மேற்கோள்காட்டி கடுமையாக சாடினார். பணக்காரர்களுக்கான அரசாக மோடி அரசு இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்த நிர்மலா சீதாராமன், ஏழை-எளியோரும், அவர்களுக்கான திட்டங்களுமே, மோடி அரசின் கூட்டாளிகள் என உறுதிபடக் கூறினார்.
மன்மோகன்சிங் சொன்னதையே செய்தோம் என்ற பிரதமரின் பேச்சுக்குப் பிறகு, காங்கிரசார், குறிப்பாக ராகுல் காந்தி வாய் திறக்க மறுப்பதாக, நிர்மலா குற்றம்சாட்டினார். நாட்டின் அழிவுக் கால மனிதராக மாறி வரும் ராகுல் தலைமையில்தான் எதிர்க்கட்சிகளும் அணிவகுப்பதாக, நிர்மலா சாடியுள்ளார்.
நாட்டின் அழிவுக் கால மனிதராக மாறி வரும் ராகுல் காந்தி என நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.காங்கிரஸ் எம்.பி. டி.என்.பிரதாபன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறும் போது சபையில் நிதியமைச்சர் கூறிய கருத்துக்களை (ராகுல் காந்திக்கு எதிராக) நான் கடுமையாக எதிர்க்கிறேன். சபைக்குள் இதுபோன்ற பாராளுமன்ற நடவடிக்கைகளில் அவர் ஈடுபடக்கூடாது. உடனடியாக, அவர் கூறிய கருத்துக்கு நாங்கள் தீவிர நடவடிக்கை எடுப்போம் என கூறி உள்ளார்.