மணிப்பூர் விவகாரம்: பிரதமர் மோடியின் அமைதி அதிர்ச்சி அளிக்கிறது-காங்கிரஸ் தாக்கு

மணிப்பூர் செல்வதற்கு பிரதமர் மோடிக்கு எப்போது நேரமும் விருப்பமும் இருக்கும்? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
மணிப்பூர் விவகாரம்: பிரதமர் மோடியின் அமைதி அதிர்ச்சி அளிக்கிறது-காங்கிரஸ் தாக்கு
Published on

புதுடெல்லி,

மணிப்பூர் மக்களின் பிரச்சினையில் பிரதமர் மோடி அமைதியாக இருப்பது உண்மையிலேயே அதிர்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது: -

2022-ம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தனக்கென ஒரு பெரும்பான்மையை உருவாக்கிக் கொண்டது. ஆனால் 15 மாதங்களுக்கும் குறைவான காலகட்டத்தில் அதாவது 2023 மே 3-ந்தேதி இரவு முதல் மணிப்பூர் எரிகிறது. நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி இருக்கிறார்கள்.

வழிபாட்டுத்தலங்கள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன.மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துமாறு தொடக்கம் முதலே காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்தது. ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் முதல்-மந்திரிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதாக காங்கிரஸ் அறிவிக்கும் வரை அது புறக்கணிக்கப்பட்டது.அதன் பிறகே முதல்-மந்திரியை ராஜினாமா செய்ய வைத்தது. இறுதியாக பிப்ரவரி 13, 2025 அன்று ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது. ஆனால் ஜனாதிபதி ஆட்சியிலும் அங்கே எந்தவித வித்தியாசமும் இல்லை. கவர்னரே தனது வீட்டில் இருந்து விமான நிலையத்துக்கு ஹெலிகாப்டரில் செல்ல வேண்டிய நிலை. மாநிலத்தின் பல பகுதிகளில் சட்டம் ஒழுங்கு இன்னும் ஆபத்தான நிலையில் உள்ளது.

பிரதமர் மோடிக்கு மணிப்பூர் செல்வதற்கு எப்போது நேரமும் விருப்பமும் இருக்கும்? உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போரை அவர் சிறிது காலத்திற்கு நிறுத்தியதாக அவரது ஆதரவாளர்கள் தம்பட்டம் அடித்தனர். ஆனால் அவரது பெரும்பாலான பெருமைகளைப் போலவே, அந்தக் கூற்றும் முற்றிலும் போலி என்று நிரூபிக்கப்பட்டது. உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லவும், பல மாநிலங்களுக்குச் சென்று தொடக்க நிகழ்ச்சிகளை நடத்தவும் அவருக்கு நேரம் இருக்கிறது. ஆனால் மணிப்பூரின் அரசியல் தலைவர்களையோ அல்லது சிவில் சமூக அமைப்புகளையோ சந்திக்க நேரம் இல்லை.

மாநில விவகாரங்களை நிர்வகிப்பதை மத்திய உள்துறை மந்திரியிடம் ஒப்படைத்த அவர், படுதோல்வியடைந்துள்ளார்.இவ்வாறு மணிப்பூர் மக்களின் துயரங்களுக்கு பிரதமர் மோடி உணர்ச்சியின்றி இருப்பது உண்மையிலேயே அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. அவரது இரக்கமற்ற மற்றும் முழுமையான அலட்சியத்திற்கான விலையை மாநில மக்கள் தொடர்ந்து கொடுத்து வருகின்றனர். அவர்களின் துன்பம் மாநிலத்துக்கும் வடகிழக்கு பிராந்தியத்திற்கும் மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் தான்" இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com