தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியுடன் காங்கிரசார் மீண்டும் சந்திப்பு

ரபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியை காங்கிரசார் மீண்டும் சந்தித்து கூடுதல் ஆவணங்களை அளித்தனர்.
தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியுடன் காங்கிரசார் மீண்டும் சந்திப்பு
Published on

புதுடெல்லி,

பிரான்ஸ் நாட்டில் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்த விவகாரத்தை கடுமையாக எடுத்துள்ள அந்த கட்சி இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மாதம் 19ந்தேதி தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியை (சி.ஏ.ஜி.) சந்தித்த காங்கிரஸ் தலைவர்கள், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டனர். அப்போது அவர்கள் இந்த ஒப்பந்தம் தொடர்பான சில ஆவணங்களையும் அளித்தனர்.

இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் தலைவர்கள் நேற்று மீண்டும் சி.ஏ.ஜி.யை சந்தித்தனர். கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா தலைமையில் சென்ற காங்கிரசார், ரபேல் ஒப்பந்தம் தொடர்பான கூடுதல் ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை அப்போது அவரிடம் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த் சர்மா, ரபேல் ஒப்பந்தம் தொடர்பான தகவல்கள் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் சி.ஏ.ஜி. வழியாக தணிக்கை செய்யப்பட்டே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். அப்போது இதில் கூடுதல் உண்மைகள் வெளிவரும் என்று கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com