

புதுடெல்லி
பிரதமர் மோடி கேரளாவில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடந்த அரசியல் பொதுக்கூட்டத்தில் இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, காங்கிரசின் இளவரசருக்கு நாட்டில் நடந்து வரும் வளர்ச்சி பற்றி எதுவும் தெரியாது. கேரளா உள்பட நாட்டில் உள்ள இளைஞர்களும், பல்வேறு நிறுவனங்களும் டிரோன் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மற்றும் வருங்கால தொழில் நுட்பத்திற்கான மையங்களில் ஒன்றாக கேரளாவை உருவாக்க பா.ஜ.க. பாடுபடும் என அவர் கூறினார்.
தொடர்ந்து அவர், கேரளாவில், இடது ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி என மாறி மாறி ஆட்சி நடந்து வருகிறது. கேரளாவின் நன்மைக்காக இந்த நடைமுறைக்கு முடிவு ஏற்பட வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு மோடியின் உத்தரவாதங்களுடன் கூடிய, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, மக்கள் பணியாற்ற வாய்ப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.