ரத்து செய்த பயணத்திற்கு கட்டணம் வசூல்:விமான நிறுவனம் ரூ.44 ஆயிரத்தை பயணிக்கு திரும்ப வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு

ரத்து செய்த பயணத்திற்கு கட்டணம் வசூல் செய்த விவகாரத்தில் விமான நிறுவனம் ரூ.44 ஆயிரத்தை பயணிக்கு திரும்ப வழங்க வேண்டும் என்று நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
ரத்து செய்த பயணத்திற்கு கட்டணம் வசூல்:விமான நிறுவனம் ரூ.44 ஆயிரத்தை பயணிக்கு திரும்ப வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
Published on

பெங்களூரு:

பெங்களூரு ஹெப்பால் பகுதியை சேர்ந்தவர் மிலின் ஜக்தீஷ்பாய் பாரேக் (வயது 35). தனியார் நிறுவன ஊழியர். இவர் பெங்களூருவில் இருந்து லண்டனுக்கு விமானத்தில் செல்வதற்கு முடிவு செய்தார். அதற்காக ஏர் இந்தியா விமானத்தில் ரூ.1.35 லட்சம் கட்டணம் செலுத்தி டிக்கெட் பதிவு செய்து இருந்தார். இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு விமான சேவையை அரசு தற்காலிகமாக நிறுத்தியது. இதையடுத்து மிலின் ஜக்தீஷ்பாய் பாரேக் பதிவு செய்த விமான பயணத்தை ரத்து செய்து ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் அவரது மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டது.

மேலும், ரத்து செய்யப்பட்ட நிலையில் அதற்கான கட்டணமாக ரூ.44 ஆயிரத்தை பிடித்தம் செய்த விமான நிறுவனம் மீதமுள்ள தொகையை மிலின் ஜக்தீஷ்பாய் பாரேக்கு திருப்பி வழங்கியது. இந்த நிலையில் விமான நிறுவனம் சார்பில் ரத்து செய்யப்பட்ட பயணத்திற்கு, கட்டணம் வசூலித்தது தொடர்பாக பெங்களூரு மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு ஒன்றை அவர் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நுகர்வோர் கோர்ட்டு, விமான நிறுவனம் சார்பில் ரத்து செய்யப்பட்ட பயணத்திற்கு, வாடிக்கையாளர் பொறுப்பு கிடையாது எனவும், எனவே அவரிடம் இருந்து வசூலித்த ரூ.44 ஆயிரத்தை திருப்பி வழங்கிட வேண்டும் என உத்தரவிட்டது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com