எல்லையில் தொடர்ந்து பதற்றம்: லடாக் மக்கள் பிரதிநிதிகளுடன் அமித்ஷா ஆலோசனை

எல்லையில் தொடர்ந்து நிலவி வரும் பதற்றம் காரணமாக, லடாக் மக்கள் பிரதிநிதிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடதினார்.
எல்லையில் தொடர்ந்து பதற்றம்: லடாக் மக்கள் பிரதிநிதிகளுடன் அமித்ஷா ஆலோசனை
Published on

புதுடெல்லி,

லடாக் பிராந்தியத்தில் இந்தியா- சீனா ராணுவம் இடையே தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. இதனால் லடாக் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டு ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் லடாக்கை சேர்ந்த பொதுமக்களின் பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூ, மத்திய உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி, மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா உள்ளிட்டோரும் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.

லடாக் பிராந்தியத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.க்கள் துப்ஸ்டன் செவாங், தீட்சே ரின்போசே மற்றும் முன்னாள் மந்திரி செரிங் டோர்ஜய் லக்ரூக் ஆகியோர் பொது மக்களின் பிரதிநிதிகளாக கலந்து கொண்டனர்.

லடாக் பிராந்திய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களுக்கான தேவைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com