

புதுடெல்லி,
இன்ஸ்டாகிராமில் பாலியல் வன்கொடுமை விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டதை தொடர்ந்து மெட்டா நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இன்ஸ்டாகிராம் தளத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் உள்ளடக்கம் கொண்ட கட்டண விளம்பரங்கள் குறித்து விவரம் அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. இதை தீவிரமாக ஆராயும் வகையில் புதிதாக இன்ஸ்டா கணக்கை தொடங்கி சோதிக்கப்பட்டது. அதில் பாலியல் ரீதியாகத் தூண்டும் உள்ளடக்கம் குறித்த பரிந்துரை வந்துள்ளது. அதை மேலும் ஆராயும் வகையில் பாலியல் ரீதியான பதிவுகளை பகிரும் 10 பயனர் பெயர்கள் பின்தொடரப்பட்டது.
அதன் பின்னர் பாலியல் ரீதியான விளம்பரங்கள் அந்த கணக்கில் வந்துள்ளது. இதில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளடக்கம் கொண்ட கட்டண விளம்பரங்கள் இருந்துள்ளன. அதில் இருந்த 'லிங்'குகளில் குழந்தைகளை உள்ளடக்கிய பாலியல் வீடியோக்கள் கட்டண சந்தாவாக கிடைத்ததுள்ளது.
இதனை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் தளத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளடக்கம் கொண்ட கட்டண விளம்பரங்களை நீக்குமாறு மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும், இது தொடர்பாக 7 நாட்களில் விரிவான விளக்கம் தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில் இன்ஸ்டாகிராம் தளத்தில் இருந்து குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளடக்கம் கொண்ட கட்டண விளம்பரங்களை நீக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான உள்ளடக்கங்களை பரப்புவதற்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையாக இது அமைந்துள்ளது. மேலும், டிஜிட்டல் தளங்கள் அரசின் விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.