

புதுடெல்லி,
அசாம் மாநிலத்தில் நேற்று 2-வது கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், பா.ஜனதா வேட்பாளரின் காரில் ஓட்டு எந்திரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த வார்டில் மறு தேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள் 4 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இது குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில், தேர்தல் அதிகாரிகளின் கார் மோசமாக இருந்தது. பா.ஜனதா கட்சியின் எண்ணங்கள் மோசமாக இருக்கின்றன. நாட்டின் ஜனநாயகத்தின் நிலை மோசமடைந்து இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக வாக்கு இயந்திரம் பாஜக பிரமுகருக்கு சொந்தமானவரின் காரில் எடுத்துச்செல்லப்பட்ட சர்ச்சை குறித்து விளக்கம் அளித்த தேர்தல் அதிகாரிகள், கட்டுப்பாட்டு அறைக்கு வாக்கு இயந்திரத்தை எடுத்துச்சென்ற கார் பழுதடைந்துவிட்டது. ஆகையால், அவ்வழியாக வந்த காரில் வாக்கு இயந்திரத்தை கட்டுப்பாட்டு அறைக்கு கொண்டு சென்றோம் என ஆங்கில தொலைக்காட்சியில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.