

சென்னை,
தருமபுர ஆதீனம் சைவத்துக்கும், தமிழுக்கும் செய்கிற தொண்டை அளவிட முடியாது என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சேக்கிழார் ஆராய்ச்சி மையம் மற்றும் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் இணைந்து 34-ம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழாவை கடந்த மாதம் (ஜூலை) 30-ந்தேதி முதல் நடத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற விழாவில், சிவாலயம் பதிப்பித்த தருமையாதீன பன்னிரு திருமுறைகள் மற்றும் வென்றிமாலைக் கவிராயர் அருளிய திருச்செந்தூர் தலபுராணம் உரையுடன் நூல்கள் வெளியிடப்பட்டன.
இதில் திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசன்னிதானம் மாசிலாமணி ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமி கலந்து கொண்டு புத்தகங்களை வெளியிட்டார். புத்தகத்தின் முதல் பிரதியை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பெற்றுக்கொண்டார்.
விழாவில், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-
"ஓலைச்சுவடிகள், செப்பேடுகளில் இருந்த திருமுறைகள் இப்போது நாகரிக மாற்றத்துக்கு ஏற்ப செயலிகளில் (அப்ளிகேஷன்) வந்துவிட்டது. ஓலைச்சுவடி, செப்பேடுகளில் இருக்கிறது அதை படியுங்கள் என இளைஞர்களிடம் சொன்னால் அது தெரியாது என்பார்கள். ஆகவே செயலி வாயிலாக அவர்களிடம் பன்னிரு திருமுறைகளை கொண்டு சேர்த்திருப்பதற்கு நன்றி தெரிவிக்கிறேன்.
பிரதமர் தலைமையிலான அரசு, தமிழகத்துக்கும், தமிழ் முறைகளுக்கும் பலவிதமான கவுரவங்களை செலுத்தி வருகிறது. முதன்முறையாக ஓதுவாமூர்த்திகளுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. முக்கியமாக புதிதாக நிறுவிக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் ஆதீனங்களுடன் பிரதமர் மோடி சென்று செங்கோலை வைத்தார்.
தருமபுர ஆதீனம் சைவத்துக்கும், தமிழுக்கும் செய்கிற தொண்டை அளவிட முடியாது. தருமபுர ஆதீனம் தன்னுடைய பாரம்பரியத்தை பின்பற்றி இன்றும் தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும், சைவத்துக்கும் தொடர்ந்து பங்களிப்பை வழங்கி வருகிறது. அவர்களின் தொண்டுக்கு எனது வணக்கங்கள்."
இவ்வாறு அவர் பேசினார்.