

மும்பை,
மராட்டிய மாநிலம் ஹிங்கோலி மாவட்டம் அந்துகா பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் முரளிதர் (வயது 50) கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று இரவு அந்துகாவில் இருந்து பசம்வா கிராமத்திற்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தார்.
இந்நிலையில், அந்துகா அருகே ஹிவாரா கிராமத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றபோது எதிரே வந்த லாரி, பைக் மீது மோதியது. இந்த கோர விபத்தில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட கான்ஸ்டபிள் முரளிதர் படுகாயமடைந்தார்.
அவரை மீட்ட கிராமத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு முரளிதரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.