

மும்பை,
மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்றின் 2வது அலையை கட்டுப்படுத்த அந்த மாநில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தொழிலாளர்களிடையே கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று தொழிலாளர் சங்கங்களை சேர்ந்தவர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசுகையில், தொற்றுநோயால் தொழில்துறை உற்பத்தி மற்றும் வர்த்தகம் தடைபடாமல் இருக்கவும், பொருளாதார சுழற்சி பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விவசாயிகளுடன் தொழிலாளர்களும் மாநிலத்தின் முன்னேற்றத்திலும், வளர்ச்சியிலும் முக்கி பங்கு வகிக்கின்றனர். தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக தொழிற்சாலைகளில் விழிப்புணர்வு குழுவை அமைக்க தொழிற் சங்ககளை கேட்டுக்கொள்கிறேன் என்றார்.