இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 2,872 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 2,872 ஆக இன்று உயர்வடைந்து உள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 2,872 ஆக உயர்வு
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாள்தோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன. நாட்டில் ஊரடங்கு அமலில் இருந்தபொழுதும், பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்பவே கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்று அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 2,649ல் இருந்து 2,752 ஆக நேற்று உயர்வடைந்துள்ளது. 30 ஆயிரத்து 153 பேர் குணமடைந்தும், 53 ஆயிரத்து 35 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 85 ஆயிரத்து 940 ஆக உயர்வடைந்து இருந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணிநேரத்தில் 120 பேர் இன்று பலியாகி உள்ளனர். இதுபற்றி மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 2,752ல் இருந்து 2,872 ஆக உயர்வடைந்துள்ளது. 34 ஆயிரத்து 109 பேர் குணமடைந்தும், 53 ஆயிரத்து 946 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 85 ஆயிரத்து 940ல் இருந்து 90 ஆயிரத்து 927 ஆக உயர்வடைந்து உள்ளது.

கடந்த 1ந்தேதி இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 1,147 ஆக இருந்தது. இதேபோன்று, கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 33 ஆயிரத்து 50 ஆக இருந்தது. 16 நாட்கள் கடந்த நிலையில், இந்த பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை இரட்டிப்புக்கும் மேல் அதிரடியாக உயர்ந்து உள்ளது. இதேபோன்று சீனாவில் 82 ஆயிரத்து 947 பேருக்கு மேல் பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில், இந்தியா இந்த எண்ணிக்கையை கடந்து சென்று உள்ளது. ஈரான் நாட்டு எண்ணிக்கையை நெருங்கி சென்று கொண்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com