

புனே,
இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிர பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், கொரோனா பரவல் அதிகளவில் குறைக்கப்பட்டு உள்ளது என நிபுணர்கள் கூறியுள்ளனர். எனினும், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. பொதுமக்கள் தங்களை காத்து கொள்ள ஊரடங்கு விதிகளை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.
நாட்டில் அதிக அளவாக மராட்டியத்தில் 12,974 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 27 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 521ல் இருந்து 548 ஆக உயர்ந்து உள்ளது. 2 ஆயிரத்து 115 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
திரிபுராவில் 2 பேர் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பின், தொற்றில்லாத நிலையை அடைந்திருந்தது. இதன்பின்பு பாதிப்பு எண்ணிக்கை 16 ஆக அதிகரித்து உள்ளது. கோவாவில் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 7 பேரும் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து முழு அளவில் விடுபட்ட நிலையை கோவா அடைந்துள்ளது. இதனை தொடர்ந்து மணிப்பூர் மற்றும் அருணாசல பிரதேசம் ஆகியவையும் கொரோனா பாதிப்பில் இருந்து முழுவதும் விடுபட்டு உள்ளன.