

புதுடெல்லி,
நாடு கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறது. இந்த தருணத்தில், கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை அடுத்த மாதம் (மார்ச்) 31-ந் தேதி வரை நீட்டித்து மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-.
கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாவோர், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றில் இருந்து முழுமையாக வெளியே வர கண்காணிப்பு, கட்டுப்பாடு, எச்சரிக்கையை பராமரிக்க வேண்டும்.
கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவும், பெருந்தொற்றில் இருந்து வெளியே வரவும் மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இலக்கு மக்களுக்கு தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றன.
அதன்படி கட்டுப்பாட்டு மண்டலங்கள் தொடர்ந்து கவனமாக வரையறுக்கப்பட வேண்டும். இந்த மண்டலங்களுக்குள் பின்பற்றப்படும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், கொரோனா கால கட்டுப்பாட்டு விதிமுறைகள் கண்டிப்பாக செயல்படுத்தப்பட வேண்டும். அனுமதிக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில், வழிகாட்டு நெறிமுறைகள் துல்லியமாக பின்பற்றப்பட வேண்டும்.
கடந்த மாதம் 27-ந் தேதி வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்கள் தொடர்ந்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் பின்பற்றப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி கீழ்க்கண்டவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
* நடைமுறையில் இருந்து வரும் வழிகாட்டுதல்கள்படி சினிமா தியேட்டர்கள் கூடுதலான நபர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
* நீச்சல் குளங்களில் அனைவருக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.
* மாநிலங்களுக்கு உள்ளேயும், இடையேயும் மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கு இ பாஸ் அனுமதி தேவையில்லை.
* கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே எல்லா செயல்களுக்கும் அனுமதி உண்டு. ஆனால் அவை வழிகாட்டும் நெறிமுறைகளுக்கு உட்பட்டவை.
* சமூக, கலாசார, விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, மத நிகழ்ச்சிகள் அரங்குகளின் 50 சதவீத கொள்ளளவு வரை அனுமதிக்கப்படுகிறது. மூடிய அரங்கில் 200 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.