

மும்பை,
நாடு கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா பாதிப்புகளால் சிக்கி அல்லல்பட்டது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, நாட்டின் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உற்பத்தி தேக்கம் அதனால் பொருளாதார மந்தநிலை மற்றும் மக்களிடையே வருவாய் முடக்கம் ஆகியவை காணப்பட்டன.
இது ஒருபுறம் தாக்க, மற்றொரு புறம் கொரோனா பாதிப்புகளால் மக்கள் பலர் உயிரிழந்தனர். இவற்றில் மராட்டியம் பிற மாநிலங்களை விட அதிக பாதிப்புகளை சந்தித்தது. 48.2 லட்சம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டு உள்ளனர். 71 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். மராட்டியத்தின் தலைநகர் மும்பை, புனே, நாக்பூர் உள்ளிட்ட நகரங்கள் அதிகம் பாதிப்படைந்து உள்ளன.
இந்நிலையில், கொரோனாவின் 2வது அலை தீவிர பாதிப்புகளை உருவாக்கி வருகிறது. இதனால், மும்பை நகர மக்கள் இரட்டை முக கவசங்களை அணிந்து கொள்ளுங்கள் என மும்பை மேயர் கிஷோரி பட்னாகர் கேட்டு கொண்டார். கூடியவரை தேவையில்லாமல் வெளியே செல்வது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.
இந்நிலையில், அவர் அளித்துள்ள பேட்டியில், நடப்பு ஆண்டில், கடந்த ஆண்டை விட மரண விகிதம் குறைவாக உள்ளது. நகரில் கொரோனா சூழலை கண்காணிக்க போர்க்கால அடிப்படையிலான கட்டுப்பாட்டு அறை ஒன்றை உருவாக்கி உள்ளோம். இதன் வழியே மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் பற்றி மக்களுக்கு அறிவித்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.