கொரோனா பாதிப்பு; பிரதமர் நிவாரண நிதிக்கு ஒரே நாளில் கோடிக்கணக்கில் நிதியுதவி

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பிரதமர் நிவாரண நிதிக்கு ஒரே நாளில் கோடிக்கணக்கில் நிதியுதவி அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கொரோனா பாதிப்பு; பிரதமர் நிவாரண நிதிக்கு ஒரே நாளில் கோடிக்கணக்கில் நிதியுதவி
Published on

புதுடெல்லி,

சீனாவில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், இந்தியாவிலும் நாளுக்கு நாள் பாதிப்பை அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் 918 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பினை எதிர்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளன. இந்நிலையில், கொரோனாவை எதிர்கொள்ள பொதுமக்கள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில், நீங்கள் அனுப்பும் சிறு தொகை பேரிடர் மேலாண்மை, மக்களை காக்கும் ஆராய்ச்சிக்கு பயன்படும். எதிர்கால சந்ததிக்கு ஆரோக்கியம் நிறைந்த, வளர்ச்சி அடைந்த நாட்டை அளிப்பதற்கு உதவியாக இருக்கும். அதனால் நீங்கள் இயன்ற பண உதவியை செய்யுங்கள் என அவர் கேட்டு கொண்டார்.

பிரதமரின் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு ரூ.500 கோடி வழங்குவதாக டாடா அறக்கட்டளை அறிவித்து உள்ளது.

இதேபோன்று டாடா சன்ஸ் நிறுவனம் கூடுதலாக ரூ.1,000 கோடி வழங்குகிறது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) ரூ.51 கோடி வழங்குகிறது.

இந்தி திரையுலக நடிகர் மற்றும் 2.ஓ என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகர் அக்ஷய் குமார், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி நிதியுதவி வழங்க முன்வந்து உள்ளார். மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது எம்.பி. நிதியில் இருந்து ரூ.1 கோடி வழங்குகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com