

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டம், உறுதியான வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பரவல், இறப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்தி, மீட்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மீட்பில் உலகளவில் இந்தியா தொடர்ந்து சாதித்து வருகிறது. இந்த தருணத்தில் ஒரே நேரத்தில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளை தயாரித்து, அவற்றின் அவசர கால பயன்பாட்டுக்கு கடந்த மாதம் 3-ந் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து முன்னுரிமை அடிப்படையில், 1 கோடி சுகாதார பணியாளர்களுக்கும், 2 கோடி முன்கள பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் மோடி கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கி வைத்தார். தற்போது தடுப்பூசி போடும் பணி வேகம் எடுத்து வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் 52 லட்சத்து 90 ஆயிரத்து 474 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்று ( வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி வரை கடந்த 21 நாட்களில் 1,04,781 முகாம்கள் மூலம் 52,90,474 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.இதன்மூலம் குறைந்த நாட்களில் 50 லட்சம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.