இந்தியாவில் கொரோனா பாதிப்பு; கடந்த 24 மணிநேரத்தில் 194 பேர் பலி

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணிநேரத்தில் 194 பேர் பலியாகி உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு; கடந்த 24 மணிநேரத்தில் 194 பேர் பலி
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாள்தோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன. நாட்டில் ஊரடங்கு அமலில் இருந்தபொழுதும், பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்பவே கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்று அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 4,337 நேற்று உயர்வடைந்தது. 64 ஆயிரத்து 425 பேர் குணமடைந்தும், 83 ஆயிரத்து 4 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 51 ஆயிரத்து 767 ஆக உயர்வடைந்து இருந்தது.

இந்த நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணிநேரத்தில் 194 பேர் பலியாகி உள்ளனர்.

இதனால், நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 4,531 ஆக உயர்வடைந்துள்ளது. 67 ஆயிரத்து 691 பேர் குணமடைந்தும், 86 ஆயிரத்து 110 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 51 ஆயிரத்து 767ல் இருந்து 1 லட்சத்து 58 ஆயிரத்து 333 ஆக உயர்வடைந்து உள்ளது.

கடந்த 1ந்தேதி இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 1,147 ஆக இருந்தது. இதேபோன்று, கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 33 ஆயிரத்து 50 ஆக இருந்தது. கடந்த 27 நாட்களில், பாதிப்பு எண்ணிக்கை நான்கு மடங்காக உயர்ந்து உள்ளது. பலி எண்ணிக்கை 4 மடங்கை நெருங்கி கொண்டிருக்கிறது.

இந்த புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட சீனாவில் 82 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. இந்த எண்ணிக்கையை இந்தியா கடந்து சென்று உள்ளது. ஈரான் நாட்டு எண்ணிக்கையை நெருங்கி சென்று கொண்டிருக்கிறது. நாடு முழுவதற்கும் சேர்த்து ஒரே நாளில் 6,566 புதிய பாதிப்புகள் இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com