மராட்டியத்தில் கொரோனா தொற்று உயர்வு; 1-8 வரை மாணவர்கள் தேர்வின்றி அடுத்த வகுப்புகளுக்கு தேர்ச்சி

மராட்டியத்தில் கொரோனா தொற்று உயர்வால் 1 முதல் 8 வரையிலான பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே அடுத்த வகுப்புகளுக்கு செல்ல தேர்ச்சி செய்யப்பட உள்ளனர்.
மராட்டியத்தில் கொரோனா தொற்று உயர்வு; 1-8 வரை மாணவர்கள் தேர்வின்றி அடுத்த வகுப்புகளுக்கு தேர்ச்சி
Published on

மும்பை,

மராட்டியத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 49,447 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன. 277 பேர் உயிரிழந்தனர். எனினும், 37,821 பேர் குணமடைந்து சென்றனர். இதுவரை 24,95,315 பேர் குணமடைந்துள்ளனர். 4,01,172 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்வை முன்னிட்டு வாரஇறுதியில் கடுமையான விதிகள் அமல்படுத்தப்படும் என முதல் மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று அறிவிப்பு வெளியிட்டார்.

இந்நிலையில், மராட்டிய பள்ளி கல்வி மந்திரி வர்ஷா கெய்க்வாட் பள்ளி மாணவர்களுக்கான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கொரோனா பாதிப்பு உயர்வை முன்னிட்டு, மராட்டியத்தில் 1 முதல் 8 வரையிலான அனைத்து மாநில வாரிய வகுப்பு மாணவர்களும், தேர்வு எழுதாமலேயே அடுத்த வகுப்புகளுக்கு செல்ல தேர்ச்சி செய்யப்பட உள்ளனர் என தெரிவித்து உள்ளார்.

இதனால் அந்த வகுப்பு பள்ளி மாணவ மாணவியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோன்று, 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான முடிவுகளும் விரைவில் எடுக்கப்படும் என அவர் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com