

மும்பை,
மராட்டியத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 49,447 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன. 37,821 பேர் குணமடைந்து சென்றனர். 277 பேர் உயிரிழந்தனர். இவர்களில் மும்பையில் 9,090 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 27 பேர் உயிரிழந்து உள்ளனர்.
மராட்டியத்தின் மும்பை நகரில் கொரோனா பாதிப்புகள் உயர்ந்து வரும் சூழலில் சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி மும்பை விமான நிலையம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், விமான நிலையத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் எந்தவொரு தனி நபருக்கும் அபராதம் விதிக்கப்படும்.
விமான போக்குவரத்து பொது இயக்குனரகம் அறிவுறுத்தலின்படி இந்த நடைமுறை ஏப்ரல் 1ந்தேதியில் இருந்து அமல்படுத்தப்படும் என தெரிவித்து உள்ளது.
மும்பை விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு இதற்கு முன்பு இருந்த ரூ.850 என்ற பரிசோதனை கட்டணம் ரூ.600 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.