

புதுடெல்லி,
நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது. 1 லட்சத்து 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. 63 ஆயிரத்திற்கும் கூடுதலானோர் மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 77 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து சென்றுள்ளனர். மராட்டியத்தில் 6 ஆயிரத்து 900க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில், நாட்டில் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்பொழுது, வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது என மத்திய அரசு அறிக்கை தெரிவிக்கின்றது.
இதுவரை வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா பாதித்தோரில் 3,731 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5,715 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து சென்றுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் இறப்பு எண்ணிக்கையும் தொடர்ச்சியாக குறைந்த அளவில் உள்ளது. சிக்கிம், மணிப்பூர், மிசோரம் மற்றும் நாகலாந்து ஆகிய 4 மாநிலங்களில் இறப்புகளே இல்லை என்றும் தெரிவித்து உள்ளது.