

புதுடெல்லி,
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சிக்கு வந்து வருகிற 30-ந் தேதி 7 ஆண்டுகள் நிறைவடைகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்த விழாவை கொண்டாட வேண்டாம் என கட்சியினருக்கு பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தி இருந்தார்.
ஆனால் இந்த 7 ஆண்டு நிறைவையொட்டி கிராமங்களில் கொரோனா தடுப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட கட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் 1 லட்சம் கிராமங்களில் இந்த பணிகளை கட்சியினர் மேற்கொள்வார்கள் என பா.ஜனதா பொதுச்செயலாளர் தருண் சுக் தெரிவித்தார்.
மக்களுக்கு முக கவசம், சானிடைசர் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்குதல், ஏழை மற்றும் தேவையில் இருப்போருக்கு ரேஷன் பொருட்கள் வழங்குதல், கொரோனா மற்றும் தடுப்பூசி விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்தல், ரத்த தான முகாம்கள் நடத்துதல் போன்ற பணிகளில் பா.ஜனதா தொண்டர்கள் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த கொரோனா தடுப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் கட்சியின் ஒவ்வொரு எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் குறைந்தபட்சம் 2 கிராமங்களிலாவது பங்கேற்பார்கள் எனவும் தருண் சுக் தெரிவித்தார்.