

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரிப்பது போலவே குணம் அடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்று ஒரே நாளில் 63 ஆயிரத்து 631 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று முன்தினத்துடன் (62 ஆயிரத்து 282) ஒப்பிடுகையில் இது அதிகம் ஆகும். மராட்டியத்தில் 11 ஆயிரத்து 749 பேரும், ஆந்திராவில் 8,827 பேரும், கர்நாடகத்தில் 6,561 பேரும், தமிழகத்தில் 5,764 பேரும், உத்தரபிரதேசத்தில் 5,567 பேரும் குணம் அடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள்.
இதன்மூலம் நாட்டில் இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 22 லட்சத்து 22 ஆயிரத்து 577 ஆக அதிகரித்துள்ளது. மீட்பு விகிதம் 75 சதவீதத்தை (74.69 சதவீதம்) நெருங்குகிறது.
நேற்று ஒரு நாளில் 945 பேர் பலியானதால், மொத்த பலி எண்ணிக்கை 55 ஆயிரத்து 794 ஆக அதிகரித்தது. ஆனாலும் பலி விகிதம் 1.87 சதவீதமாக சரிவு அடைந்துள்ளது. இது உலகின் மிக குறைந்த பலி விகிதத்தில் ஒன்று ஆகும்.
தற்போது கொரோனாவில் இருந்து மீள்வதற்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6 லட்சத்து 97 ஆயிரத்து 330 ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் நான்கில் ஒரு பங்கை விட குறைவு (23.43 சதவீதம்) என்பது குறிப்பிடத்தக்கது.