

திருவனந்தபுரம்,
கேரளாவில் கொரோனா பரவல் காரணமாக ஏப்ரல் மாதம் முதல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தொற்று விகிதம் படிப்படியாக குறைந்ததால் வார நாட்களில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. பஸ், வாகன போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் கோவில்கள் உட்பட வழிபாட்டு தலங்கள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கேரளாவில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) வார இறுதி நாட்களில் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. முழு ஊரடங்கையொட்டி அரசு, தனியார் பஸ் போக்குவரத்து சேவை முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.
மதுக்கடைகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் இயங்காது என அரசு அறிவித்து உள்ளது. ஓட்டல்களில் ஆன்லைன் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் மருத்துவம், சுகாதாரம், பத்திரிகை வினியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு முழு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.