

புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சுகாதாரத் துறை மந்திரி ஹர்ஷவர்தன், கொரோனா தடுப்பூசி பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் 16-ம் தேதி தொடங்கியது. முதலில் சுகாதார பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டது. முன்கள பணியாளர்களுக்கு இந்த வாரத்தில் இருந்து போடப்பட்டு வருகிறது. சுகாதார, முன்கள பணியாளர்கள் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மூன்றாவது கட்டமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி அடுத்த மாதம் தொடங்குகிறது. அதில், 50 வயது மற்றும் அதை கடந்தவர்களுக்கும், இதர நோய்களால் பாதிக்கப்பட்ட 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும். இப்பிரிவினரில் மொத்தம் 27 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.