கொரோனா பாதிப்பு உயர்வு: கேரளாவுக்கு மத்திய அரசின் 6 நபர் நிபுணர் குழு பயணம்

கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் கேரளாவுக்கு மத்திய அரசின் 6 பேர் கொண்ட நிபுணர் குழு செல்கிறது.
கொரோனா பாதிப்பு உயர்வு: கேரளாவுக்கு மத்திய அரசின் 6 நபர் நிபுணர் குழு பயணம்
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,056 பேருக்கு தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,27,301 ஆக அதிகரித்துள்ளது. 131 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 16,457 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 17,761 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மொத்தம் 31,60,804 பேர் குணமடைந்துள்ளனர். கேரளாவில் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 1,49,534 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுகாதார துறை தெரிவித்துள்ளது.

கேரளாவில் கொரோனா 2வது அலையின் பாதிப்புகள் இன்னும் குறையவில்லை. தொடர்ந்து கொரோனா பாதிப்பு உயர்வடைந்து வருகிறது. இதனை முன்னிட்டு கேரளாவில் 2 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, வருகிற 31ந்தேதி மற்றும் ஆகஸ்டு 1ந்தேதி ஆகிய 2 நாட்கள் இந்த முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கேரளாவுக்கு மத்திய அரசின் 6 பேர் கொண்ட நிபுணர் குழு பயணம் மேற்கொள்கிறது. இதுபற்றி மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று கூறும்போது, தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குனர் தலைமையிலான 6 உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்றை கேரளாவுக்கு அனுப்பி வைக்க இருக்கிறோம்.

கேரளாவில் தொடர்ந்து அதிக அளவிலான கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. அதனால், கொரோனா மேலாண்மைக்கான மாநில அரசின் முயற்சிகளுக்கு உதவிடும் வகையில் இந்த குழு செயல்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com