

கர்னூல்,
ஆந்திர மாநிலத்தின் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. டாக்டர் சஞ்சீவ் குமார். இவருடைய வீடு, கர்னூல் மாவட்டத்தில் உள்ளது. இவருடைய குடும்ப உறுப்பினர்கள் 6 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில், எம்.பி.யின் சகோதரரும் அடங்குவார். 6 பேரும் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் உடல்நிலை சீராக இருக்கிறது. இத்தகவல்களை சஞ்சீவ் குமார் எம்.பி. நிருபர்களிடம் தெரிவித்தார்.
கர்னூல் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால்தான், பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதாக அவர் கூறினார்.
இத்துடன் சேர்த்து, கர்னூல் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 292 ஆக உயர்ந்துள்ளது. ஆந்திராவில் இங்குதான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்னூல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 3 சிறப்பு கொரோனா ஆஸ்பத்திரிகளில் 252 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 7 டாக்டர்களும் அடங்குவர். அவர்களில் ஒருவர் இறந்து விட்டார். கர்னூல் மாவட்டத்தில் நிலைமை மோசமடைந்ததால், முதன்மை செயலாளர் அஜய் ஜெயின் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.