

பெங்களூரு,
கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளுக்கு கடந்த 12-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்)-பகுஜன் சமாஜ் கூட்டணி ஆகிய 3 கட்சிகள் இடையே தான் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவாயின. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாநிலம் முழுவதும் 38 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.
அந்த மையங்களில் ஓட்டு எண்ணிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். பல்வேறு சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்படும். கர்நாடகத்தில் ஆட்சியை கைப்பற்றுவது யார்? என்பது இன்று பகல் 12 மணி அளவில் ஏறக்குறைய உறுதியாக தெரிந்துவிடும்.
தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க தேவையான 113 இடங்கள் கிடைக்காது எனவும், மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமையும் என்றும் தெரிவித்துள்ளன. இதனால் கர்நாடகத்தில் 2004-ம் ஆண்டை போல் மீண்டும் கூட்டணி அரசு அமைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. கூட்டணி பேச்சுவார்த்தைக்கு 3 கட்சிகளும் இப்போதே ஆயத்தமாகி உள்ளன.