

புதுடெல்லி,
திருச்சி அருகே போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அத்துமீறலால் கர்ப்பிணி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சம்பவம் குறித்து 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. அதில், சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, பலியான கர்ப்பிணியின் குடும்பத்துக்கு அளிக்கப்பட்ட நிதி உதவி, அவருடைய கணவரின் உடல்நிலை ஆகியவற்றை பற்றியும் தெரிவிக்குமாறு கூறியுள்ளது.
தேசிய மனித உரிமை ஆணையம் தனது அறிக்கையில், பத்திரிகை செய்தியில் உள்ளது உண்மை என்றால், இது போலீஸ் அராஜகத்துக்கு மோசமான உதாரணம் ஆகும். அந்த அப்பாவி பெண்ணின் வாழும் உரிமை மீறப்பட்டுள்ளது. போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம் ஆகிறது. பணியின்போது பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ளுமாறு போலீசாருக்கு டி.ஜி.பி. அறிவுறுத்த வேண்டும் என்று ஆணையம் எதிர்பார்க்கிறது என்று கூறியுள்ளது.