வளர்ப்பு மகளை அடித்துக் கொன்ற தம்பதி - அதிர்ச்சி சம்பவம்

4 வயது வளர்ப்பு மகளை தம்பதி அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

மும்பை,

மராட்டிய மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் 4 வயது வளர்ப்பு மகளை தம்பதி அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில்லாட் குடியிருப்பைச் சேர்ந்தவர் பஹீம் ஷேக் (35 வயது). இவரது மனைவி பவுசியா ஷேக் (27 வயது). இந்த தம்பதி கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் ஆயத் என்ற 4 வயது பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளனர்.

நேற்று முன்தினம் தம்பதி இருவரும், உடல்நலம் பாதிக்கப்பட்டதாக குழந்தையை துணை மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து இருவரும் அவசர அவசரமாக குழந்தையின் உடலை அடக்கம் செய்ய முயன்றனர்.

இந்த நிலையில் குழந்தை நோய் அல்லது உடல்நலக்குறைவால் உயிரிழக்கவில்லை என்றும், குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அந்த பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், போலீசாருக்கு தெரிவித்துள்ளார். இந்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார் குழந்தையின் உடலை அடக்கம் செய்யாமல் தடுத்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையின் முடிவில் குழந்தையின் உடலில் காயங்கள் இருந்தது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், குழந்தையை அடித்து துன்புறுத்தியதை பவுசியா ஷேக் ஒத்துக் கொண்டார். இதையடுத்து அவர்கள் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்கள் சட்டப்பூர்வமாக குழந்தையை தத்தெடுத்தார்களா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com