

இம்பால்,
மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதத்தில் மெய்தி மற்றும் குகி என இரு குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 260 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர்.
இதனை தொடர்ந்து, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும், அவ்வப்போது வன்முறை பரவி மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில், பிரதமர் மோடி வருகிற 13-ந்தேதி மிசோரம் மற்றும் மணிப்பூருக்கு பயணம் மேற்கொள்வார் என தகவல் தெரிவிக்கின்றது.
இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் மற்றும் தகவல் தொடர்பாளரான ஜெய்ராம் ரமேஷ் கூறும்போது, உலகம் முழுவதும் பிரதமர் மோடி பயணிக்கிறார். கடந்த இரண்டரை ஆண்டுகளில் அசாம், அருணாசல பிரதேசத்திற்கு சென்றார். ஆனால், மணிப்பூர் மக்களை சந்திக்க அவருக்கு நேரம் இல்லை என குற்றச்சாட்டாக கூறினார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் பயணம் பற்றி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ஒரு வழியாக செப்டம்பர் 13-ந்தேதி மணிப்பூர் செல்வதற்கு பிரதமருக்கு தைரியம் வந்து விட்டது போன்று தெரிகிறது என கிண்டலாக தெரிவித்து உள்ளார். ஆனால், இது முன்பே நடந்திருக்க வேண்டும். அதிக காலதாமதம் ஏற்பட்டு உள்ளது என்றும் தெரிவித்து இருக்கிறார்.