நீதிமன்ற காவல் முடிவடைகிறது: ப.சிதம்பரம் இன்று கோர்ட்டில் ஆஜர்

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் நீதிமன்ற காவல் முடிவடைவதால், ப.சிதம்பரம் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
நீதிமன்ற காவல் முடிவடைகிறது: ப.சிதம்பரம் இன்று கோர்ட்டில் ஆஜர்
Published on

புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு கடந்த மாதம் 20-ந் தேதி தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, மறுநாள் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.

பின்னர், சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சி.பி.ஐ. காவலுக்கு அனுப்பப்பட்டார். சி.பி.ஐ. காவலுக்கு மீண்டும், மீண்டும் 4 முறை அனுப்பப்பட்ட ப.சிதம்பரத்தை கடந்த 5-ந் தேதி நீதிமன்ற காவலில் வைக்க சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இதனைத் தொடர்ந்து ப.சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 16-ந் தேதி தனது பிறந்த நாளையும் சிறையிலேயே கொண்டாடினார்.

இந்த நிலையில் ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் இன்றுடன் (வியாழக்கிழமை) முடிவடைகிறது. இதனால் அவர் இன்று மாலை சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார்.

அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தள்ளுபடி செய்து விட்டது. இதனால் இன்று சி.பி.ஐ. கோர்ட்டில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு, நீதிபதி உத்தரவின் அடிப்படையில் அமலாக்கத்துறை தனது நடவடிக்கையை தொடங்கும் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com