

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை முழுமையாக ஓய்வதற்குள், மீண்டும் தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது.
நாடு முழுவதும் 10 ஆயிரத்துக்குள் வந்த தினசரி தொற்று எண்ணிக்கை, கடந்த மாதம் இறுதியில் இருந்து வேகமெடுக்க தொடங்கியது. நேற்று காலை 8 மணி வரையிலான முந்தைய 24 மணி நேரத்தில் சுமார் 1.60 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது கடந்த 224 நாளில் அதிகபட்சம் ஆகும்.
இவ்வாறு நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தாற்று வேகமெடுத்து இருக்கும் நிலையில், இவற்றை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாப்பது குறித்து பிரதமர் மோடி நேற்று மாலையில் மத்திய மந்திரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
காணொலி முறையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா, சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் விமான போக்குவரத்து செயலாளர், உள்துறை செயலாளர், கேபினட் செயலாளர் மற்றும் ரெயில்வே வாரிய தலைவர் உள்ளிட்ட பல்வேறு உயர்மட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் நிலவரம் குறித்து ஆய்வு செய்ததுடன், தொற்று பரவலை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. நாடு முழுவதும் சிறுவர்கள் உள்ளிட்டோருக்கு இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகள் விவரம், சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள், மருந்து இருப்புகள் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.
அந்தவகையில் கடந்த ஒரு வாரத்தில் நாட்டின் 31 சதவீத சிறுவர்-சிறுமிகளுக்கு தடுப்பூசி போடப்பட்ட தரவுகளை பிரதமரிடம் அதிகாரிகள் சமர்ப்பித்தனர்.
பின்னர் இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மாவட்ட அளவிலேயே போதிய சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள் இருப்பதை உறுதி செய்யுமாறும், சிறுவர்-சிறுமிகள் மற்றும் அனைத்து பயனாளிகளுக்கான தடுப்பூசி திட்டத்தை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்துமாறும் அறிவுறுத்தினார்.
தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய மோடி, பரிசோதனைகள், தடுப்பூசிகள் மற்றும் மரபணு வரிசைமுறை உட்பட மருந்தியல் துற தொடர்பான ஆய்வுகளை தொடருமாறு மருத்துவ நிபுணர்களை கேட்டுக் கொண்டார்.
கொரோனாவை கட்டுப்படுத்த முககவசங்களின் பயன்பாடு மற்றும் சமூக இடைவெளியை ஒரு புதிய இயல்பான நடவடிக்கையாக மாற்றவும், லேசான மற்றும் அறிகுறியற்ற பாதிப்புகளுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவதை திறம்பட செயல்படுத்துவதையும் அவர் வலியுறுத்தினார்.
தொற்று நிர்வாகத்தில் சுகாதாரப் பணியாளர்களின் இடைவிடாத சேவைகளுக்கு நன்றி தெரிவித்த அவர், அவர்களுக்கும் மற்ற முன்னணி ஊழியர்களுக்கும் முன்னெச்சரிக்கை டாஸ் (பூஸ்டர் டோஸ்) தடுப்பூசியை உறுதிசெய்ய வேண்டும் என்றார். மேலும் மாநிலங்களின் தொற்று நிலவரம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதல்-மந்திரிகள் கூட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் பிரதமரின் ஆய்வுக்கூட்டத்தை தொடர்ந்து, மாநிலங்களின் கொரோனா நிலவரம் தொடர்பாக மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா தனியாக ஆய்வு நடத்த உள்ளார்.
அந்தவகையில் மராட்டியம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கோவா, குஜராத் ஆகிய 5 மாநிலங்கள் மற்றும் தாத்ரா நாகர் ஹவேலி மற்றும் டையூ-டாமன் யூனியன் பிரதேசத்தின் சுகாதார மந்திரிகளுடன் அவர் இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.