

புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி 16-ந்தேதி கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கியது. சுகாதார பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்பட்டது. பிப்ரவரி 1-ந்தேதி முதல் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், இணைநோய்களை உடைய 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கடந்த மார்ச் 1-ந்தேதி தடுப்பூசி போடுவது தொடங்கியது. ஏப்ரல் 1-ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது தொடங்கியது.
மே 1 முதல் 18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. கடந்த 3-ந்தேதி முதல் 15-18 வயது பிரிவினருக்கு தடுப்பூசி போடுவது தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் தடுப்பூசி திட்டம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு தலைவர் டாக்டர் என்.கே.அரோரா கூறியதாவது:-
15-18 வயது பிரிவினருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இந்த பிரிவினரில் 7 கோடியே 40 லட்சத்து 57 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில் 3 கோடியே 45 லட்சம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு விட்டது. 4 வாரங்களில் 2-வது டோஸ் தடுப்பூசி போடப்படும்.
தடுப்பூசி இன்னும் செலுத்திக்கொள்ளாத இந்த வயது பிரிவினர் இந்த மாத இறுதிக்குள் தடுப்பூசி செலுத்தப்பட்டு விடுவார்கள். இந்த வயது பிரிவினருக்கு 2-வது டோஸ் பிப்ரவரி மாத இறுதிக்குள் போடப்பட்டு விடும்.
15-18 வயது பிரிவினருக்கு தடுப்பூசி போட்டு முடித்த உடன் 12-14 வயது பிரிவினருக்கு மார்ச்சில் தடுப்பூசி போடுவதற்கான கொள்கை முடிவை அரசு எடுக்கும் என்று அவர் கூறினார்.
முன்னதாக நமது நாட்டில் 12-14 வயது பிரிவினர் 7.5 கோடி பேர் தடுப்பூசி போடுவதற்காக காத்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.