

வதோதரா,
ஐதராபாத்தில் கடந்த ஞாயிறு அன்று பேசிய பிரதமர் மோடி, பெட்ரோல் டீசல் விலை உலகளவில் கடுமையாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் வாங்குவதற்காக செலவிடப்படும் அந்நியச் செலாவணியையும் சேமிக்க, அவற்றை சிக்கனமாக பயன்படுத்துவது நம் அனைவரின் பொறுப்பாகும். ஓராண்டுக்கு திருமணத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம் என்று நான் மக்களுக்கு கோரிக்கை விடுக்கிறேன்.
கடினமான பொருளாதார சூழ்நிலையில் நாட்டின் வளங்களை சேமிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். கொரோனா காலத்தில் வீட்டிலிருந்தே வேலை செய்வது ஆன்லைன் மீட்டிங் மற்றும் வீடியோ கான்பரன்ஸ் போன்ற முறைகளுக்கு மக்கள் எளிதாக பழகி விட்டனர். எரிபொருள் நுகர்வை மிச்சப்படுத்த இதேபோன்ற ஒரு நடைமுறையை மீண்டும் ஊக்கப்படுத்த வேண்டும். சேமிக்கும் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலும் எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியா அந்நிய செலவாணி செலவிடுதை குறைக்கும்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் பள்ளிகள் இணைய வழியில் மாணவர்களுக்கான கற்பித்தலை தொடங்க வேண்டும் என்று பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக
குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “கடந்த சில ஆண்டுகளாக உலகமே அசாதாரண சூழலை எதிர்கொண்டு வருகிறது. முதலில் கொரோனா பெருந்தொற்று, அதன் பின்னர் சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார சவால், இப்போது மேற்காசிய போர் பதற்றத்தால் உலக நாடுகள் சவாலை எதிர்கொண்டுள்ளது.
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய நெருக்கடியை கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்தியது. இந்த தசாப்தத்தின் மிகப்பெரிய நெருக்கடியாக மேற்காசிய போர் நிலவி வருகிறது. நாம் எல்லோரும் இணைந்து எப்படி கொரோனா சவாலை கடந்து வந்தோமோ, அது போல இந்த சவாலையும் நிச்சயம் நாம் கடந்து வருவோம். இதன் பாதிப்பு மக்களுக்கு ஏற்படாத வகையிலான முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்ய பல லட்சம் கோடி ரூபாயை இந்தியா செலவிடுகிறது. அதே சமயத்தில் இறக்குமதி பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. அதோடு உலக அளவில் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் கவனிக்க வேண்டும். இந்த சூழலில் வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்களின் பயன்பாட்டை நாம் குறைக்க வேண்டும். நமது அன்றாட வாழ்க்கையில் இந்த பொருட்களை நாம் சார்ந்து இருப்பதை தவிர்க்க வேண்டும். மேலும், அந்நிய செலவாணியில் தொடர்புடைய தனி செயல்பாட்டை தவிர்க்க வேண்டும்.
பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டை நாட்டு மக்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். மெட்ரோ, பொது போக்குவரத்து, மின்சார வாகனங்கள் போன்றவற்றை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும். அதேபோல் டிஜிட்டல் தொழில்நுட்பம் பல்வேறு விஷயங்கள் எளிதானதாக மாற்றியுள்ளது. அந்த வகையில் அலுவலகம் சார்ந்த கூட்டத்தை ஆன்லைனில் விர்ச்சுவல் முறையில் நடத்தலாம்.
வீட்டில் இருந்து பணியாற்றும் நடைமுறையை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பின்பற்றலாம். தங்க இறக்குமதி சார்ந்து அதிகளவிலான தொகையை நம் தேசம் செலவிடுகிறது. அந்த வகையில் இயல்பு நிலை திரும்பும் வரை தங்கம் வாங்குவதை மக்கள் தள்ளிப்போடலாம்” என்று அவர் கூறினார்.