

திருவனந்தபுரம்,
கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிக அளவில் காணப்படுகிறது. நாட்டிலேயே தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக கேரளாதான் பல வாரங்களாக உள்ளது. இந்த நிலையில், ஓணம் பண்டிகை கரணமாக அளிக்கப்பட்ட தளர்வுகளால் தொற்று பாதிப்பு மீண்டும் ஜெட் வேகத்தில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, கேரளாவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையடுத்து, வரும் திங்கள் கிழமை முதல் இரவு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.