

ஐதராபாத்,
கள்ளக்காதலில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் தண்டனை வழங்கப்படுகிறது. அதுவே பெண்ணுக்கு எந்த தண்டனையும் இல்லை. எனவே, இந்திய தண்டனை சட்டம் 497வது பிரிவை மாற்ற வேண்டும் என்று ஜோசப் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி சுப்ரீம் கோர்ட் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இதற்கு மத்திய அரசு தாக்கல் செய்துள்ள 11 பக்க பதில் மனுவில், "கள்ளக்காதலில் ஈடுபடும் மனைவிக்கு எதிராக கணவர் புகார் கொடுத்தால் அவனது மனைவியுடன் பழகிய ஆணுக்கு மட்டுமே தண்டனை கொடுக்க முடியும். கணவன் கள்ளக்காதலில் ஈடுபட்டால் மனைவியால் புகார் கொடுக்க முடியாதநிலை உள்ளது. ஆண்- பெண் சமத்துவத்திற்கு எதிரானதாக இருக்கும் ஐபிசி 497 ஆவது பிரிவை நீக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமியினான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-
கணவன் பெண்ணின் எஜமானர் அல்ல. ஆணுக்கு சமமாக பெண்ணையும் நடத்த வேண்டும். பெண்ணுக்கு எதிராக பாகுபாடு காட்டுவது சட்ட விதிகளை மீறுவதாகும்.
தகாத உறவில் ஈடுபடும் ஆஅணுக்கு மட்டுமே தண்டனை வழங்கும் சட்டப்பிரிவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது. தகாத உறவால் யாரும் தற்கொலைக்கு தூண்டப்படாத வகையில் அது கிரிமினல் குற்றம் இல்லை. 497-ஆவது பிரிவு சட்டவிரோதமானது என தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த நிலையில், பெண்களை ஆண்களின் சொத்து என கூறும் வகையிலான சட்ட பிரிவை உடைத்தெறிந்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்கிறேன் என மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், தகாத உறவில் ஈடுபடும் கணவருக்கு எதிராக மனைவி நீதிமன்றத்திற்கு செல்லவும், இழப்பீடு கோரவும் குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் பெண்களால் முடியும். கள்ள காதலில் ஈடுபடுவோருக்கு எதிராக விவகாரத்து கோரவும் முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.