மணிப்பூரில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு

மணிப்பூரில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மணிப்பூரில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு
Published on

மணிப்பூர்,

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பைரேன்சிங் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு கடந்த ஆண்டு மே மாதம் குகி, மெய்தி இன மக்களுக்கிடையே கலவரம் வெடித்தது. 200-க்கு மேற்பட்டோர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் குடியேறினர்.

இதையடுத்து மணிப்பூரில் இயல்புநிலை படிப்படியாக திரும்பி வந்த நிலையில், அங்கு மீண்டும் வன்முறை சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. டிரோன்கள், சிறிய விமானங்கள், வெடி மருந்துகள் நிரப்பிய ராக்கெட் உள்ளிட்டவற்றால், ஆயுதம் ஏந்திய குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் கடந்த 7-ம் தேதி நடந்த வன்முறை சம்பவங்களில், எட்டு பேர் கொல்லப்பட்டனர்; 12 பேர் காயமடைந்தனர். இதனால் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டக் கோரியும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கவர்னர் மாளிகை, தலைமைச் செயலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு மணிப்பூர் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டக் கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு இம்பால் மாவட்டங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளுக்கு மட்டும் ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடும் என்பதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com