ஊரடங்கு கால சிறப்பு நிவாரணம்; 4 கோடி ஏழைப்பெண்களின் வங்கி கணக்குகளில் தலா ரூ.500 - மத்திய அரசு செலுத்தியது

ஊரடங்கு கால சிறப்பு நிவாரணமாக 4 கோடி ஏழைப்பெண்களின் வங்கி கணக்குகளில் மத்திய அரசு ரூ.500 செலுத்தியது.
ஊரடங்கு கால சிறப்பு நிவாரணம்; 4 கோடி ஏழைப்பெண்களின் வங்கி கணக்குகளில் தலா ரூ.500 - மத்திய அரசு செலுத்தியது
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 21 நாள் ஊரடங்கை மத்திய அரசு 25-ந் தேதி முதல் அமல்படுத்தியது.

இதன் காரணமாக சாதாரண கூலி தொழிலாளர்கள் தொடங்கி அனைத்து தொழில் துறையினரும், வியாபாரிகளும், தனியார் துறையினரும் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.

பலதரப்பினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், கடந்த 26-ந் தேதி ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கோடி மதிப்பிலான நிதி உதவி திட்டங்களை அறிவித்தார்.

அப்போது அவர், ஜன்தன் வங்கி கணக்கு வைத்துள்ள ஏழைப்பெண்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு (ஏப்ரல் முதல் ஜூன் மாதம் முடிய) மாதம்தோறும் ரூ.500 சிறப்பு நிவாரணம் வழங்கப்படும்; இந்த தொகை வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் என குறிப்பிட்டார்.

ஊரக வளர்ச்சித்துறையால் விடுவிக்கப்படுகிற இந்த நிவாரண உதவித்தொகை, ஏப்ரல் மாதம் முதல் வார இறுதியில் 20 கோடியே 39 லட்சம் பெண்களின் ஜன்தன் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டு விடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 4 கோடியே 7 லட்சம் ஏழைப்பெண்களின் ஜன்தன் வங்கி கணக்குகளில் தலா ரூ.500-ஐ மத்திய அரசு செலுத்தியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com