

புதுடெல்லி,
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கடந்த 15ந்தேதி டவ்தே புயலாக மாறியது.
இந்த புயல் வடக்கு திசை நோக்கி நகரத்தொடங்கி, கோவா கடல் பகுதியில் அதிதீவிர சூறாவளி புயலாக வலுப்பெற்றது. கோவாவிற்கு தென்மேற்கே 130 கிலோ மீட்டர் தொலைவிலும், மும்பைக்கு தெற்கே 450 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக்கொண்டிருந்த புயல், தொடர்ந்து வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது.
அதே திசையில் பயணிக்கும் புயல் நாளை, மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து மேற்கே அரபிக்கடலில் நிலை கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேகத்தில் பயணிக்கும் புயல் நாளை மறுநாள் (18ந்தேதி) அதிகாலையில் குஜராத் மாநிலம் போர்பந்தர் மற்றும் மகுவா இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூறாவளி புயலால், மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் மணிக்கு 150 முதல் 160 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். காற்று சுழன்றடிக்கும். கனமழையும் பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதனை முன்னிட்டு, ராணுவம், கடற்படை மற்றும் கடலோர காவல் படை ஆகியவற்றின் மீட்பு மற்றும் நிவாரண குழுவினர், கப்பல்கள் மற்றும் விமானங்களுடன் தயார் நிலையில் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இதேபோன்று, தேசிய பேரிடர் மீட்பு படையின் 79 குழுக்கள் புயல் கடந்து செல்லும் மாநிலங்களில் தயாராக வைக்கப்பட்டு உள்ளன. இதேபோன்று, 22 கூடுதல் குழுக்களும் தயார் நிலையில் உள்ளன.