தட்சிண கன்னடா, உடுப்பியில் தொடர் கனமழையால் மெஸ்காமிற்கு ரூ.11¼ கோடி இழப்பு

தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் தொடர் கனமழையால் மெஸ்காமிற்கு ரூ.11¼ கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
தட்சிண கன்னடா, உடுப்பியில் தொடர் கனமழையால் மெஸ்காமிற்கு ரூ.11¼ கோடி இழப்பு
Published on

மங்களூரு-

தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் தொடர் கனமழையால் மெஸ்காமிற்கு ரூ.11 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இந்த கனமழையால் தட்சிண கன்னடா, உடுப்பி பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பல பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்து கொண்டது.

மேலும் பலத்த சூறைக்காற்றும் வீசியதால் ஏராளமான மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. மின்வயர்கள் அறுந்ததுடன் டிரான்ஸ்பார்மர்களும் சாய்ந்தன. இதனால் தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன.

ரூ.11.28 கோடி இழப்பு

இந்த தொடர் கனமழையால் மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் சாய்ந்ததால் மெஸ்காம் (மங்களூரு மின்பகிர்மான கழகம்) நிறுவனத்துக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது. தட்சிண கன்னடா மாவட்டத்தில் 48 டிரான்ஸ்பார்மர்களும், 2,049 மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. மேலும் 76 கிலோ மீட்டர் தூரத்திற்கு மின்வயர்கள் சேதமடைந்துள்ளன.

இதேபோல், உடுப்பி மாவட்டத்தில் 84 டிரான்ஸ்பார்மர்களும், 1,123 மின்கம்பங்களும் சாய்ந்தன. மேலும் 37 கிலோ மீட்டர் தூரத்துக்கு மின்வயர்கள் சேதமடைந்தன.

ஒட்டுமொத்தமாக மெஸ்காம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 197 டிரான்ஸ்பார்மர்களும், 6,884 மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. 181 கிலோ மீட்டர் தூரத்துக்கு மின்வயர்கள் சேதமடைந்தன. இதனால் மெஸ்காமிற்கு ரூ.11.28 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்களை சரி செய்யும் பணியில் மெஸ்காம் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com