

புவனேஸ்வர்,
ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்த மர்ம கும்பல், ஏ.டி.எம். இயந்திரத்தில் தடிமனான கயிற்றைக் கட்டியுள்ளனர். பின்னர், தங்களது காரின் பின்பகுதியில் அந்த கயிற்றின் மற்றொரு முனையை கட்டி, ஏடிஎம் இயந்திரத்தை அடியோடு பெயர்த்து, சாலை வழியே சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றுள்ளனர்.
தொடர்ந்து, ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் வைத்து ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து, அதில் இருந்த லட்சக்கணக்கான பணத்தை கொள்ளையடித்த கொள்ளையர்கள், வெறும் இயந்திரத்தை மட்டும் சாலையோரத்தில் வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.
இந்தத் துணிகர கொள்ளை சம்பவம் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் முழுமையாக பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சி.சி.டி.வி. ஆதாரங்கள் மற்றும் தடயவியல் நிபுணர்களுடன் இணைந்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.