

புதுடெல்லி,
வருமான வரித்துறை சார்பில் நாட்டில் உள்ள அனைவருக்கும் பான் கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு அட்டை வழங்கப்படுகிறது. வருமான வரி செலுத்துவோர் மட்டுமல்லாது, வரி செலுத்தாதவர்களும் பான் அட்டை பெறலாம். பான் கார்டை அரசின் மற்ற திட்டங்களின் பலன்களை பெறுவதற்கு பயன்படுத்த முடியாது.
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. இதற்கான காலக்கெடு வரும் மார்ச் 31 ஆம் தேதியோடு முடிவுக்கு வர உள்ள நிலையில், பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது.
ஆதார் வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் வரை அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் இல்லை என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடுவை நேரடி வரிகள் வாரியம் நீட்டித்து உள்ளதாக கூறப்படுகிறது. பான் எண்- ஆதார் கார்டு எண் இணைப்பதற்கான காலக்கெடு நான்காவது முறையாக நீட்டிக்கப்பட்டு உள்ளது.