இமாசலபிரதேசத்தில் கனமழைக்கு பலி 78 ஆக உயர்வு-31 பேர் மாயம்

கனமழையால் ஏற்பட்ட இழப்புகள் ₹572 கோடி என மதிப்பிடப்பட்டு இருக்கிறது
சிம்லா,
இமாசலபிரதேச மாநிலத்தில் கனமழையால் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் பருவமழை தொடங்கியதில் இருந்து மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை 78 பேர் உயிரிழந்தனர். 31 பேர் காணாமல் போய் விட்டனர்.
மண்டி மாவட்டம் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளது. திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக காணாமல் போன 31 பேரை கண்டுபிடிக்க டிரோன்கள் மற்றும் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு மீட்பு பணிகள் நடக்கிறது. மாநிலத்தில் 243 சாலைகள் மூடப்பட்டு உள்ளன. அவற்றில் 183 மண்டி மாவட்டத்தில் மட்டும் உள்ளன. 10-ந்தேதி வரை மாநிலத்தில் பல இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனமழையால் ஏற்பட்ட இழப்புகள் ₹572 கோடி என மதிப்பிடப்பட்டு இருக்கிறது. இருப்பினும் தரவுகள் இன்னும் தொகுக்கப்பட்டு வருவதால் இந்த எண்ணிக்கை ₹700 கோடியை நெருங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.






